உலக புத்தக தினம்: விருதுநகரில் வாசகர்களுக்காக தவமிருக்கும் 29 லட்சம் புத்தகங்கள்!


விருதுநகர்: மனிதனின் சமூக, பொருளாதார மற்றும் நாகரிக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது புத்தகங்கள். உலகம் முழுவதும் இன்று புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் வாசகர்களின் விரல்கள் புரட்டிப் பார்ப்பதற்காக நூலகங்களில் 29 லட்சம் புத்தகங்கள் தவமிருக்கின்றன.

உலக புத்தக தினம், உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் ஏப்ரல் 23-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு எனப்படும் யுனெஸ்கோவால் முதல் உலக புத்தக தினம் கடந்த 1995-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து, புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாசிப்பை ஊக்கப்படுத்த தமிழக அரசின் நூலக ஆணைக்குழு மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மைய நூலங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர நடமாடும் நூலகங்கள், வட்டார மற்றும் கிராமப்புற நூலங்களும் பகுதிநேர நூலகங்களும் இயங்கி வருகின்றன. இவ்வாறு தமிழகத்தில் சுமார் 3,900 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்ட மைய நூலங்களில் பொது அறிவு, கவிதை, கட்டுரை நூல்கள், கல்வி, கலை, இலக்கியம், வரலாறு, மற்றும் புவியியல் சார்ந்த நூல்கள் தவிர மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும், ஆராய்ச்சி படிப்புகளுக்கு உதவவும் வகையிலான ஏராளமான புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.

செய்தித் தாள்கள், அரிய நூல்கள் போன்றவைகளைப் படிக்க நூலகங்களுக்கு நாள்தோறும் ஏராளமான வாசகர்கள் வந்துசெல்கின்றனர். குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களும், ஆய்வு படிப்பு மாணவர்கள் மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களும் தங்கள் துறை சார்ந்த நூல்களைத் தேடி நூலகங்களுக்குச் செல்வது வழக்கம்.

அறிஞர் அண்ணா எழுதிய நூல்கள், பாரதியார் கவிதைகள் மற்றும் பாரதிதாசன் நூல்கள் போன்ற அரசுடமையாக்கப்பட்ட 5 ஆயிரம் நூல்கள் நூலக ஆணைக்குழு மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட நூல்களை வாசர்கள் இருந்த இடத்திலிருந்தே வாசிக்கும் வகையில் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மைய நூலகங்களுக்கு தலா ஒரு ஹார்டுடிஸ்க் மற்றும் டேப் போன்ற தொடுதிரை வசதியுடன் கூடிய 5 ரீடர்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், வாசிப்பை நேசிக்கச் செய்யும் வகையில் மாவட்டந்தோறும் அரசு சார்பில் புத்தக திருவிழாக்களும் நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டத்தில் 167 நூலகங்கள் இயங்கி வருகின்றன. 3.13 லட்சம் பேர் நூலகங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 2,23 லட்சம் வாசகர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூலகங்களை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு, 5,536 புலவலர்களும், 103 பெரும் புரவலர்களும் உள்ளனர். 22 கொடையாளர்கள் மூலம் இதுவரை நூலகங்களுக்கு ஏராளமான நூல்கள் மற்றும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அதோடு, சிறுவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை உருவாக்க நாட்டிலேயே முதன் முதலாக காமிக்ஸ் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளதும், திருத்தங்கலில் 10 ஆயிரம் நூல்களுடன் தமிழுக்கென சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் மொத்தம் உள்ள 28.93 லட்சம் நூல்களில் இதுவரை 9.95 லட்சம் நூல்கள் மட்டுமே கடந்த ஆண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மீதம் உள்ள நூல்கள் வாசகர்களின் வருகைக்காக காத்திருக்கின்றன.

x