தேனியில் வெயிலின் தகிப்பைக் குறைக்க தடுப்பணைகளில் குளித்து மகிழும் பொதுமக்கள்!


வீரபாண்டியில் உள்ள முல்லை பெரியாற்றின் நீண்ட தடுப்பணையில் உற்சாகமாக குளித்து மகிழும் பொதுமக்கள் | படம்: என்.கணேஷ்ராஜ்.

தேனி: கோடை வெயிலின் வெப்பம் காரணமாக தேனி மாவட்ட மக்கள் உள்ளூர் தடுப்பணைகளை தேடிச் செல்வது அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பணை பகுதிகளில் கூட்டம் அதிகரித்து அவைச் சுற்றுலாதலம் போல மாறி வருகிறது.

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்று நீர் லோயர் கேம்ப் முதல் குன்னூர் வரை ஏராளமான உள்ளாட்சிகளை கடந்து செல்கிறது. இந்த ஆற்றின் வழித்தடத்தில் வாய்க்கால் பாசனத்துக்கு நீர் எடுத்துச் செல்லும் வகையில் ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதேபோல் வைகை ஆற்றின் துணை ஆறுகளிலும் பல தடுப்பணைகள் உள்ளன. கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது பலரும் தடுப்பணைகளில் குளித்து மகிழ்வது வழக்கம்.

தற்போது தேனி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலினால் வெப்பம் அதிகரித்துள்ளது. இரவிலும் புழுக்கம் நீடித்து வருகிறது. பொதுத்தேர்வு முடிந்ததுடன், பல வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் இந்த தடுப்பணைகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்கின்றனர். தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் சீலையம்பட்டி, வீரபாண்டி, உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பல தடுப்பணைகள் குளிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையுடன் உள்ளன.

தற்போது நீரும் குறைவாக வருவதால் குழந்தைகள், பெண்கள் அருவி போன்று விழும் இந்த தடுப்பணையில் அமர்ந்து குளிக்கின்றனர். ஆழமும் குறைவாக உள்ளதால் பலரும் நீச்சல் பழகுகின்றனர். இதற்காக பலரும் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து தடுப்பணைகளில் சாப்பிட்டு, குழந்தைகளையும் குளிப்பாட்டி மகிழ்கின்றனர்.

கோடைகாலத்துக்கு பலரும் மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். ஆனால் தேனி மாவட்டத்தில் இது போன்ற தடுப்பணைகள் உள்ளூர்வாசிகளுக்கு சுற்றுலாதலமாக உள்ளதால் எவ்வித செலவுமின்றி நேரத்தை உற்சாகமாக செலவிடும் நிலை உள்ளது. மேலும் வீரபாண்டி தடுப்பணை சாலைக்கு மிக அருகில் பார்வையாக அமைந்துள்ளதால் சுற்றுலா செல்லும் பலரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி இதில் குளித்து வருகின்றனர்.

x