கோடை வெயிலின் அச்சுறுத்தல்களில் முக்கியமானது வெப்பத் தாக்கு (Heat Stroke) எனப்படும் வெப்ப மயக்கம். இதனால், நம்மில் பலரும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். வெப்பத்தில் இருந்து நம் உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்...
சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப நம் உடல் தன் வெப்பநிலையைத் தானாகவே சமன்செய்துகொள்ளும். சில நேரம் அதிக வெப்பத்துக்கு நாம் ஆட்படும்போது வெப்பச் சமநிலை தடைப்படும். அப்போது நாம் வெப்ப மயக்கத்துக்கு ஆளாகலாம். அதிக வெப்பநிலையால் மூளை, இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்கக்கூடும்.
வெப்பம் அதிகமான இடத்தில் அதிக நேரம் வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றுடன் உடலின் நீர்ச்சத்து குறையும்போது ஒருவரை வெப்ப மயக்கம் மிக எளிதாகத் தாக்கும். வெப்ப மயக்கம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். என்றாலும் குழந்தைகள், வயதானவர்கள், நீரிழிவால் பாதிப்புக்குள்ளானவர்கள், விளையாட்டு வீரர்கள், மது அருந்துவோர் போன்றோர் அதிக வெயிலில் வெளியே செல்லாமல் தவிர்ப்பது நல்லது.
வெப்ப மயக்கத்தால் பாதிக்கப்பட்டால் மனக் குழப்பம், தடுமாற்றம் போன்றவை தொடங்கி கோமா நிலை வரைக்கும்கூடச் செல்லலாம். அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும். சிலருக்கு அதிக வியர்வை வெளியேற்றத்தால் வெப்ப மயக்கம் ஏற்பட்டிருக்கும். அவர்களது சருமம் சில்லென்று இருக்கும். இவை தவிர மேலும் சில அறிகுறிகளை வைத்தும் ஒருவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறியலாம்.
வெப்ப மயக்க அறிகுறிகள்
> இதயம் வேகமாகத் துடிப்பது / நாடித் துடிப்பு அதிகரிப்பது
> மூச்சிரைப்பு / மெதுவாக மூச்சுவிடுவது
> ரத்த அழுத்த உயர்வு அல்லது குறைவு
> வியர்வை வெளியேறுவது நிற்பது
> எரிச்சல், மறதி, குழப்பம், பேச்சில் தொடர்பின்மை
> தூக்கம் வருவதுபோல் இருப்பது
> வாந்தி
> தலைவலி
> மயக்கம்
தவிர்ப்பது எப்படி? - வெயில் அதிகமாக இருக்கும்போது வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் போதுமான அளவுக்குத் தண்ணீரைக் குடித்து உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி காபி குடிப்பதை நிறுத்துங்கள். மது அருந்துவதையும் தவிருங்கள். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக்கூடும். வெளிர் நிற தளர்வான ஆடைகளையே அணியுங்கள்.
எளிய மருந்துகள் என்னென்ன?
> புதினா, கொத்தமல்லி சாறு
> பெரிய நெல்லிக்காய் சாறு
> நோற்றுக்கற்றாழை சாறு
> வெங்காய சாறு
வெப்பத்தைக் குறைக்கும் உணவு எது?
> இளநீர்
> மோர்
> மண்பானைத் தண்ணீர்
> தர்பூசணி
> மாதுளை
> வெள்ளரிக்காய்
என்ன செய்ய வேண்டும்?
> தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம். இதில் அலட்சியம் கூடாது.
> காலை, மாலை இரண்டு முறை குளிக்க வேண்டும்.
> லேசான, பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
> வெயிலில் வாகனத்துக்கு உள்ளே காத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
> கேஃபீன் உள்ள பானங்கள், மது குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
> வெயிலில் வெளி வேலைகளை கூடியமட்டும் குறைத்துக்கொள்ள வேண்டும்.