கோடையை சமாளிக்க ஏசி-க்கு மாற்றான உடல் நலனுக்கு உகந்த வழிதான் என்ன ?


படம்: மெட்டா ஏஐ

கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தால் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பகலில் கூட ‘ஏசி’ பயன்பாடு இயல்பாகிவிட்டது. ஏசி அதிக அளவில் பயன்படுத்துவது உடல் நலனுக்கு உகந்தது அல்ல என்பது அனைவரும் அறிந்ததே.

தினமும் நீண்ட நேரம் ஏசி பயன்படுத்துவதால் தோல் வறட்சி, நுரையீரல் சார்ந்த நோய்கள், உடல் சோர்வு, கப நோய்கள், வெரிகோஸ் வெய்ன் போன்றவை உண்டாகப் பல மடங்கு வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. தொடர்ந்து நீண்ட நேரம் ஏசி பயன்படுத்தை தவிர்க்க வேண்டும் என்பது முக்கிய அறிவுறுத்தல்.

கோடையைச் சமாளிக்க வீட்டுக்குக் குளிர்சாதன வசதியைச் செய்வதுதான் ஒரே வழி என்றில்லை. அப்படியே குளிர்சாதன வசதியைச் செய்வதாக இருந்தாலும் வீட்டின் படுக்கை அறையில் மட்டுமேதான் செய்யமுடியும். இதுதான் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்களுக்குச் சாத்தியமான ஒன்றாக இருக்கமுடியும். அதுவும் அடுத்த மாதம் மின் கட்டணம் வந்தால் வியர்த்துவிடும்.

தென்னம் ஓலை, பனை ஓலை, வெட்டி வேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை ஜன்னல்களில், பால்கனிகளில் தொங்கவிடலாம். இவற்றால் வீட்டின் உள்பகுதி குளிர்ச்சியாகும்.

தனி வீடாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் மாடியில் நீரில் நனைத்த கோணிகளைப் பரப்பி வைக்கலாம். இதன் மூலம் வீட்டின் உள்ளே சூடு இறங்குவது குறையும். அத்துடன், வீட்டின் மேல் மாடியில் தென்னங்கீற்றுகளால் கோடைக்காலம் முடியும்வரை நிரந்தரமாகப் பந்தல் போட்டு வைக்கலாம். மாலை வேளையில் மாடியின் தரையில் நன்றாகத் தண்ணீர்த் தெளித்துவிட்டு அமர்ந்துகொண்டால் அவ்வளவு ரம்யமாக இருக்கும்.

வீட்டில் உள்ளே புழங்கும் சூடான காற்றை வெளியேற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன்களைக் கோடைக் காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஃபேன்களை முகப்பு அறையிலும் படுக்கை அறையிலும் சமையல் அறையிலும் பொருத்த வேண்டும். அதேநேரத்தில் வீட்டின் ஜன்னல்களின் வழியாகக் குளிர்ச்சியான காற்று வீட்டின் உள்ளே பரவும்.

பெரும்பாலுன் வீட்டுக்குள் காற்று வந்து போக வழிசெய்ய வேண்டும். அப்படிச் செய்தால் வீட்டுக்கு உள்ளே உள்ள வெப்பத்தைக் காற்று குளிர்விக்கும். மேலும் ஜன்னல்களில் மூங்கில் திரைகளைப் பொருத்தி அதன் மீது லேசாகத் தண்ணீர் தெளித்தால் அது வரும் காற்றைக் குளிர்வித்து வீட்டுக்குள் அனுப்பும். வீட்டுக்கு இயற்கையான குளுமை கிடைக்கும். தேவையில்லாமல் மின்சாதனங்களை இயக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவை வெளிவிடும் வெப்பமும் வீட்டுக்குள்தான் வியாபித்திருக்கும்.

தோட்டம் வைக்க இடம் இல்லையே என்ற கவலையே வேண்டாம். வீட்டுச் சுவர்களிலேயே செடி, கொடிகளைப் படரவிட்டு வளர்க்கலாம். சுவர்களில் மணி பிளாண்ட் போன்ற செடிகளைத் தொங்கவிட்டு வளார்க்கலாம். பசுமைச் சுவர் தாவர முறைக்கு மேலை நாடுகளில் மிகுந்த வரவேற்பு உண்டு. இப்போது நம் நாட்டிலும் வரவேற்பு கூடியிருக்கிறது.

வெயில் காலத்தில் மெத்தையில் படுக்க வேண்டிய அவசியம் இருந்தால், இலவம் பஞ்சால் செய்த மெத்தையே உகந்தது. இலவம் பஞ்சு மெத்தை உடல் சூட்டை நீக்கும். கொதிக்கும் வெயிலில் ‘ஃபோம்’ வகை மெத்தைகளைப் பயன்படுத்தும்போது தோலில் எரிச்சல், கட்டி, அரிப்பு போன்றவை வருவதற்கான சாத்தியம் அதிகம்.

அதேபோல், நெகிழிப் பாய்களில் உறங்கினால், நம் தோலும் நெகிழும் அளவுக்கு அவை கொதிக்கின்றன. பாரம்பரியமிக்க கோரைப் பாய், படுக்கையாகப் பயன்படுவது மட்டுமின்றி மருத்துவக் குணங்களையும் கொண்டது. காய்ச்சலைத் தணித்து, பசியை அதிகரிக்கும். மின் விசிறியைக் கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு, இயற்கை விசிறியை லாவகமாக வீசினால் குளிர்ந்த காற்று நம்மை வசியப்படுத்தும்.

x