மதுரை; மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கோடை விடுமுறையில் தவறான பாதைகளுக்கு செல்லாமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு பல்வேறு பொழுதுப்போக்கு, விளையாட்டு மற்றும் கல்விப்பயிற்சிகளை வழங்கி வீடுகளிலே பயனுள்ள முறையில் பொழுதுப்போக்குவதற்கு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுடைய குழந்தைகளாகவே உள்ளனர். இவர்களில் சிலர் பெற்றோர்கள் இல்லாமல், தாத்தா, பாட்டி அல்லது சிங்கிள் பெற்றோர் அரவணைப்பில் உள்ளனர்.
பெற்றோர்கள் பகல் நேரத்தில் பெரும்பாலும் கூலி வேலைகளுக்கு சென்று விடுகிறார்கள். அவர்கள் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வரை, குழந்தைகள் வீடுகளில் தனியாக இருப்பார்கள். பள்ளிகள் இருக்கும்போது அவர்கள், காலை முதல் மாலை வரை பள்ளிகளிலே இருந்துவிடுவார்கள்.
அதனால், பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக கருதி பதற்றமின்றி வேலைக்கு சென்று திரும்புவார்கள். கோடை விடுமுறை நாட்களில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள், குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு பதற்றத்துடனே இருப்பார்கள்.
அதுபோல், பெற்றோர் அரவணைப்பில் இல்லாத குழந்தைகள், தாத்தா, பாட்டிகளை ஏமாற்றிவிட்டு வெளியே சுற்றுவார்கள். அவர்கள் இந்த கோடை விடுமுறையில் தவறான பாதைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. மாநகராட்சிப் பள்ளிகளில் ப்ளஸ்-2, ப்ளஸ்-1 மற்றும் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தற்போது தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் அவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்கிவிடும். அதனால், இந்த ஒரு மாத கோடை விடுமுறையை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் பயனுள்ள முறையில் பொழுதுப்போக்குவதற்கும், அவர்களை நல்வழிப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடப்பு கோடை விடுமுறையில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு பல்வேறு பொழுதுப்போக்கு, பசுமை நடைப்பயிற்சி, விளையாட்டு மற்றும் கல்விப்பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கு ஆணையாளர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாநகராட்சி கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் பெற்றோர்கள் கண்காணிப்பு இருக்கும். அவர்களை அவர்கள் பெற்றோர் கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுவார்கள். ஆனால், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. பெற்றோர்கள் கண்காணிப்பிலும் அவர்கள் இருப்பதில்லை. நீர்நிலைகளுக்கு நண்பர்களுடன் தனியாக சென்று குளிப்பார்கள்.
மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் இந்த கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் தமுக்கம் மைதானத்தில் வரும் 29, 30-ம் தேதிகளில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடக்க உள்ளது. இரண்டாம் நாள் 30-ம் தேதி காலையில் மதுரை முத்து, உள்ளூர் சிறந்த பேச்சாளர்களை அழைத்து கலகலப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
செஸ், கேரம், யோகா, தையல், ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு பயிற்சிகளை நிபுணத்துவம் கொண்டர்களை கொண்டு வழங்கப்பட உள்ளது. அவர்கள் இந்நிகழ்ச்சியில் இந்த விளையாட்டுகளையும், பயிற்சிகளையும் கற்றுக் கொண்டு கோடை விடுமுறை நாட்களில் வெயிலில் வெளியே சுற்றாமல் வீடுகளிலே அந்த விளையாட்டுகளையும், பயிற்சிகளையும் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ்-2 படிக்க உள்ள மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளியிலே வாரத்தில் ஒரு நாள் சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக இன்று மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை ‘கிரீன் வாக்’ (பசுமை நடைப்பயணம்) சமணர் படுகை பகுதிக்கு அழைத்து செல்ல உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.