கோவை: கோடை வெயிலால் ஏற்படும் வெப்ப பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள, உணவு பழக்க வழங்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சை தொற்று, நீர்க்கடுப்பு எனப் பல்வேறு வெப்ப நோய்களுக்கு பலரும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தால், வெப்ப நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால், சிறுநீர் கடுப்பு ஏற்படும். இதற்கு வெயிலில் அலைவதைக் குறைத்து, அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல, வியர்வையை அவ்வப்போது துடைத்து உடலை சுத்தமாக பராமரிக்காவிட்டால் வியர்க்குரு வரும். வெயில் காலத்தில், சமைத்த உணவு வகைகள் விரைவாகக் கெட்டுவிடும்.
அவற்றில் நோய்க் கிருமிகள் அதிகளவில் பெருகும். இந்த உணவை தவிர்ப்பதன் வாயிலாக வாந்தி, வயிற்றுப் போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களில் இருந்து தப்பலாம். மாறாக, ஒவ்வொரு வேளைக்கு ஏற்றாற்போல் சமைத்த உணவை உடனுக்குடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீராகாரங்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது. குறிப்பாக, இளநீர், பழச் சாறு, வெள்ளரிக் காய், நீர்ச் சத்து மிக்க பழங்கள், காய் கறிகள் உட்கொள்ள வேண்டும். காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.