பயணிக்கும் பாடல்
குரலை உயர்த்தி உயர்த்திப் பாடி
யாசகம் பெற்று
இறங்கினான்
இரு கண்களும்
தெரியாத அவன்
பாடலைச்
சுமந்துகொண்டு
ஊர் ஊராய்
செல்கிறது ரயில்.
- காமராஜ்
அஞ்சலி
இலையொன்று உதிர
உடனே
மலரொன்றை உதிர்த்து
மரியாதை செலுத்துகிறது
மரம்!
- சாமி கிரிஷ்
தந்தை மெழுகுகள்
தித்திக்கும்
இனிப்புகளை
ஈட்டவியலாமல்
தவிக்கும் தந்தை
மெழுகுகளின்
மன பலூன்களே
உடைபடும் கண்ணீர் பரிசாகின்றன
செல்ல மகளின்
அகவை நாளில்!
- ரகுநாத் வ
மழலை மலர்
கத்திப்பாராவைக் கடந்து
பாரிமுனை நோக்கிச்செல்லும்
சாலை நடுவில்
மெட்ரோ ரயில் பில்லர் 87-ல்
தூளியில் கவிழ்ந்து படுத்து
கொள்ளைச் சிரிப்பில்
முகத்தைக் காட்டியது
குழந்தை.
திடுமென
தடதடக்கும் ரயில் சத்தத்தில்
தூளி அசைவதைப் போலவே
ஒரு பிரம்மை
இனி உரசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
என் ஆட்டோவை
வேறு வாகனத்தின் மீது.
- அரவிந்தன்
காதல் மதில்
குட்டிச்சுவர் என
கிடக்கும் என் காதலில்
சற்று நேரம்
அமர்ந்துவிட்டுப் போ
பெயர்ந்து விழும்
சுண்ணாம்பு கற்களில்
முத்துகள் கிடைக்கலாம்
கத்தும் பல்லியின் குரலில்
கலர் காலம் மினுங்கலாம்.
- கவிஜி
இழப்பின் கனம்
முடிவிலித் தேடலென்பதை
ஊர்ஜிதப்படுத்துகிறது அறிவு
மறுதலிக்கும் மனசு
உன்னைத் தேடுதலின் பொருட்டு
முட்டாளாக்கிக் கொள்கிறது
தன்னை
இன்னும் அகலாத
உன் இருப்பின் வாசனைதான்
இந்தப் பொழுதின் மீது
ஏற்றி வைக்கிறது
ஒரு கனத்தை!
- மகேஷ் சிபி
தேடல்
குழந்தையின்
சாயலிருக்கிறது
வயதான பிறகு மகளைத்
தேடும்
அம்மாவுக்கு!
- மு.முபாரக்
பன்மை பௌர்ணமி
தெருவிளக்குகளின்
அருகில் வாழும்
மரங்களுக்கு
அமாவாசையிலும்
நிலாக்காலம்!
- நேசன் மகதி