கோடை சீசனால் குமரியில் படகு சேவை ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிப்பு!


கன்னியாகுமரியில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் படகு சவாரிக்காக செல்லும் சுற்றுலா பயணிகள்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் மண்டபமும், அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தற்போது இரு பாறைகள் இடையேயும் கண்ணாடி இழை பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

தற்போது கோடை சீசன் நடைபெறுவதால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கடல் நடுவே விவேகானந்தர் பாறைக்கு அழைத்து செல்வதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் படகு போக்குவரத்துக் கழகத்தின் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த படகு போக்குவரத்து நடைபெறுகிறது.

படகில் பயணம் செய்வதற்காக சாதாரண கட்டணமாக ஒருவருக்கு ரூ.75ம், சிறப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.300ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டி உள்ளது. தற்போது குகன் மற்றும் பொதிகை படகுகள் மட்டுமே விவேகானந்தர் பாறைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படகுகளும் மாலை 4 மணிக்கு வழக்கம் போல் நிறுத்தப்படுவதால் அதன் பிறகு படகு துறைக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்ல முடியாமலும் கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக் கூடிய அவல நிலை இருந்து வருகிறது. கோடை விடுமுறை சீசனில் படகு போக்குவரத்து நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

எனவே சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கோடை விடுமுறை சீசனையொட்டி படகு சேவை காலை 8 மணிக்கு தொடங்குதற்கு பதிலாக இன்று முதல் 1 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது காலை 7 மணிக்கு தொடங்கியது. கோடை சீசன் முடியம் இந்த மே மாத இறுதி வரை இது அமலில் இருக்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தினர் தெரிவித்தனர்.

x