கூடலூரில் வாசனை திரவியம் கண்காட்சி தொடக்கம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?


கூடலுார்: கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியில் முக்கிய அம்சமாக 274 கிலோ வாசனை திரவியங்களைக் கொண்டு குன்னூர் ரயில் நிலையம், ஜல்லிக்கட்டு காளை, பட்டாம்பூச்சி உட்பட அலங்காரங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா கோத்தகிரியில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கியது. கோத்தகிரியில் நடந்து முடிந்த காய்கறி கண்காட்சியை தொடர்ந்து, கூடலுாரில், இன்று (மே 9) முதல் 11-ம் தேதி வரை வாசனை திரவிய கண்காட்சி நடக்கிறது.

தொடர்ந்து, 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஊட்டியில் ரோஜா கண்காட்சி, 16 முதல் 21-ம் தேதி வரை மலர் கண்காட்சியும், 23-ம் முதல் 25-ம் தேதி வரை குன்னுாரில் பழ கண்காட்சியும், காட்டேரி பூங்காவில் மே 31, ஜூன் 1 தேதிகளில் மலைபயிர் கண்காட்சி நடக்கிறது. இந்நிலையில், கூடலுாரில் இன்று 11-வது வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது.

செய்தி த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அரசு கொறடா கா. ராமச்சந்திரன் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் விவசாயிகள்‌ மற்றும்‌ பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்‌ வகையில்‌ மாவட்ட நிர்வாகம்‌, 46 அரசு துறை அரங்குகளும்‌, 36 தனியார்‌ துறை அரங்குகளும்‌ வடிவமைக்கப்பட்டு இருந்தது.

தோட்டக் கலைத் துறையின்‌ சார்பாக 13 அடி நீளம்‌, 5 அடி உயரம்‌ மற்றும்‌ 4 அடி அகலம்‌ கொண்ட குன்னூர்‌ ரயில்‌ நிலையம்‌, வாசனை திரவிய மரம்‌, இந்திய வரைப்படம்‌ மற்றும்‌ வண்ணத்துப்பூச்சி மாதிரி உருவம்‌ ஏலக்காய்‌, கிராம்பு, பட்டை, சோம்பு, கசகசா, ஜாதிக்கொட்டை, மல்லி, சீரகம்‌, வெந்தயம்‌, மிளகாய்விதை, மராட்டிமுக்கு, ஸ்டார்‌. அனீஸ்‌, ஷாஜீரா கருஞ்சீரகம்‌, வெள்ளைமிளகு, பிரியாணி இலை, குருமிளகு, மற்றும்‌ ஜாதிபத்திரி போன்ற வாசனை திரவிய பொருட்களை கொண்டு 274 கிலோ எடையில்‌ வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும்‌ 13.5 அடி உயரம்‌, 18 அடி அகலம்‌ கொண்ட அலங்கார நுழைவு வாயிலும்‌ வாசனை திரவியங்களை கொண்டு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, வனத்துறை, நகராட்சி, மருத்துவத்‌ துறை, தீயணைப்புத்துறை, சட்டத்‌ துறை, பேரூராட்சிகள்‌ மூலம்‌ அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, சார் ஆட்சியர் சங்கீதா, கூடலூர் ஆணையர் சுவிதா ஸ்ரீ உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் நகராட்சி சார்பாக பிளாஸ்டிக் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட கொரில்லா உருவம் நெல்லியால நகராட்சி சார்பில் கழிவுகளில் இருந்து மறுஉருவாக்கம் செய்யப்பட்ட யானை வாகனங்கள் ஆகியவை காட்சிப்படுத்திருந்தன.

x