“ஒற்றுமை நோக்கிய பாதையை காட்டியவர் கம்பர்” - புதுச்சேரி ஆளுநர் பேச்சு


புதுச்சேரி: பாரத ஒற்றுமையையும், சமூக பிரிவினைகளை கடந்து ஒற்றுமை நோக்கிய பாதையை காட்டியவர் கம்பர் என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.

புதுவையில் 58-ம் ஆண்டு கம்பன் விழா கம்பன் கலையரங்கில் இன்று காலை திருநாள் மங்கலத்துடன் தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இவ்விழாவை தொடக்கி வைத்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேசியது: “கால வரலாற்றில் எத்தனையோ காவியங்கள் தோன்றுகின்றன. எத்தனையோ புலவர்கள் தோன்றுகிறார்கள். ஆனால் எல்லா காவியங்களும்- புலவர்களும் காலத்தை கடந்து புகழோடு நிலைப்பது இல்லை. மிகச் சில காவியங்களே மக்களின் எண்ணத்தோடும், வாழ்வோடும், சமுதாயத்தின் உணர்வோடும் கலந்து, அமர காவியமாக நிலைத்து நிற்கின்றன. அதில் ஒன்றுதான் கம்ப ராமாயணம்.

வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் கம்பர் எழுதிய ராமாயணம் நூற்றாண்டுகளை கடந்து போற்றப்படுகிறது. உலக அளவில் தமிழ் மக்கள் மத்தியில் ராமன் இன்று கடவுளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என்றால் அதற்கு கம்பர் ஒரு முக்கிய காரணம் என்று தான் சொல்ல வேண்டும்.

எந்த காவியம் மக்களின் வாழ்வியலோடு கலந்து இருக்கிறதோ அது காலத்தை ஜெயிக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவேதான், என்னைப் பொருத்த வரையில் கம்பன் விழா என்பது ஒரு இலக்கிய விழா மட்டும் அல்ல; தமிழ் மொழியின் பெருமையை, நம்முடைய பண்பாட்டின் ஆழத்தை, மனித நேயத்தின் விசாலத்தை எடுத்துச் சொல்லுகிற ஒரு விழா.

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் வாழ்வியல் தத்துவங்களை - கோட்பாடுகளை தனக்குள்ளே கொண்டு மனித சமுதாயத்தை எப்படி வழி நடத்துகிறதோ அதேபோல, கம்ப ராமாயணமும் மனித சமுதாயத்திற்கான வாழ்வியல் கருத்துக்களை, வாழ்க்கைத் தத்துவங்களை நமக்கு எடுத்துச் சொல்லுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயம் எதிர்கொள்ளுகிற பல சிக்கல்களுக்கான தீர்வுகள் கம்ப ராமாயணத்தில் இருக்கிறது. ஒரு அரசனின் பொறுப்பு, குடிமக்களின் நலம், நேர்மையான வாழ்க்கை, நம்பிக்கையான உறவு எல்லாம் இந்த காவியத்தில் இருக்கிறது.
கம்பர், ராமனை ஒரு அரசனாக, வீரனாக மட்டும் அல்ல, ஒரு நல்ல பண்புடைய மனிதனாக, தர்மத்தை காத்தவனாக காட்டுகிறார். அதுதான் இந்த காவியத்தின் பலம்.

ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் சமுதாய ஒற்றுமையின் பிரதிநிதியாக இருக்கிறார்கள். அனுமன், குரங்கு குலத்தை சேர்ந்தன்; விபீஷ்ணன் அரக்க குலத்தில் ஒருவன். அவர்கள் ராமனோடு தர்மத்தின் பக்கம் நின்றார்கள். அதே போல, இந்த நாடு முழுவதும் உள்ள மக்கள் எல்லோரும் சகோதரத்துவ உணர்வோடு வாழ்கிறார்கள் என்பதை மிக அழகாக எடுத்துக் கூறிய காவியம் கம்ப ராமாயணம். வேடர் குலத்து குகன், குரங்கு இன சுக்ரீவன், அரக்கர் குல விபீஷ்ணன் எல்லோரையும் ராமனின் தம்பிமார்களாக காட்டுகிறார் கம்பர்.

வடக்கே அயோத்தியில் பிறந்த ராமன் இடையில் உள்ள நாடுகள், காடுகள், ஆறுகளை கடந்து தமிழகத்தை அடைகிறான். இங்கிருந்து இலங்கைக்கு செல்கிறான். இது தான் கம்பன் சொல்லும் சமத்துவம், சகோதரத்துவம் - பாரத ஒற்றுமை. இன்றைய சமூகத்தின் பிரிவினைகளை கடந்து, ஒற்றுமை நோக்கிச் செல்லும் பாதை.

கம்பர் அறத்தை உயர்த்தி, உழைப்பை மதிக்கும் எளியவர்களை பெருமை படுத்துகிறார். அவரது கருத்து பண்பாட்டில் சிறந்த ஒரு சமத்துவ சமுதாயம் உருவாக அடிப்படையாக இருக்கிறது. விழா எடுத்து நாம் கம்பரை போற்றினால் மட்டும் போதாது. அவர் காட்டிய வழியில் வாழ வேண்டும். நீதி, சமத்துவம், நல்ல ஒழுக்கம். சமய ஒற்றுமை இவற்றை நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு செய்தால் கம்பரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். இன்றைய இளைஞர்கள் கம்ப ராமாயணத்தை ஒரு பழைய காவியம் என்று நினைக்காமல், மனித குலத்தை வழிநடத்தக் கூடிய அதன் வாழ்வியல் தத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

தொடக்கவிழாவில் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியது: “சட்டம் இயற்றும் துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை இவை ஜனநாயக நாட்டின் ஆணிவேர்களாகும். ஜனநாயக நாட்டில் கவிஞர் கம்பருக்கு கொண்டாடும் விழாவில் மூன்று அங்கங்களும் இணைந்து கொண்டாடுகிறது. திருவரங்கத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டது. ராமரின் குலத்தெய்வம் திருவரங்கம் ரங்கசாமி. சில சூட்சுமங்கள் புரிவதில்லை.

எத்தனையோ கவிஞர்கள் தோன்றினாலும் கம்பரை கொண்டாடும் அளவுக்கு வேறு யாரையும் கொண்டாடவில்லை. வால்மீகியை அடிப்படையாக வைத்துதான் கம்பர் இக்காப்பியத்தை படைத்தாலும் பல இடத்தில் மாறுப்பட்டு சில மாற்றங்களை படைத்துள்ளார். மூல நூலை விட உயர்ந்து நிற்கிறது. துரித உணவாக நமக்கு படைத்துள்ளார். கம்பரின் தாக்கம் இல்லாத கவிஞர் உலகிலேயே இல்லை. அவரது தாக்கம் உலகளவில் படைக்கப்பட்ட ராமாணய நூல்களிலுள்ளது. ஒவ்வொரு பாத்திரத்தையும் குறைவில்லாமல் செதுக்கியவர் கம்பர்" என்றார்.

முன்னதாக முதல்வர் ரங்கசாமி வரவேற்றார், விழா மலரை பேரவைத்தலைவர் செல்வம் வெளியிட்டார். அமைச்சர் நமச்சிவாயம் நுால்களை வெளியிட்டார். விழாவில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x