ஒரத்த நாடு அருகே ஒக்கநாடு மேலையூரில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த 2 குளங்களை, இளைஞர் குழுவினர் 20 நாட்களில் தூர் வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் ஒப்படைத்தனர். அந்தக் குழுவினரை எம்.பி உள்ளிட்டோர் பாராட்டினர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் இருந்த 2 குளங்களில், ஒரு குளம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது வந்தது. அந்த குளமும் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்தது. அந்த குளத்தின் அருகிலேயே மற்றொரு குளம் இருந்துள்ளதாக ஊர் பெரியவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அந்தக் குளம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள அந்த குளத்தை மீட்டு, தூர் வார வேண்டும் என எம்.பி முரசொலியிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, நீர் நிலைகளை தூர் வாரி பாதுகாத்து வரும், பேராவூரணி அருகே நாடியம் கிராமத்தைச் சேர்ந்த நிமல் ராகவனை தொடர்பு கொண்ட எம்.பி முரசொலி, ஒக்கநாடு மேலையூரில் உள்ள குளங்களை தூர் வாரி தருமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து கிராம மக்கள் உதவியுடன், அந்தக் குழுவினர் ரூ.3 லட்சம் செலவில் தூர் வாரும் பணியை முடித்தனர். இதில் பல ஆண்டுகளாக தூர்ந்து போன குளமும், அருகில் ஆக்கிரமிப்பில் இருந்த மற்றொரு குளமும் மீட்கப்பட்டது.
இந்த குளங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை குளக்கரையில் நடைபெற்றது. இதில் எம்பி ச.முரசொலி, முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது 20 நாளில் இரு குளங்களை தூர்வாரிய நிமல் ராகவன் குழுவினருக்கு எம்பி மற்றும் கிராம மக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து நிமல் ராகவன் கூறியது: ஒக்கநாடு மேலையூரில் 20 நாளில் 2 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. தூர் வாரும் மண்ணை வெளியே கொண்டு செல்லாமல் கரைகளை பலப்படுத்துவது தான் நோக்கம். அதன்படி, கரைகளை பலப்படுத்தி மரக்கன்றுகளும், பனை விதைகளும் நடப்பட்டு வருகிறது. நீர்வரத்து வாய்க்காலும் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த குளங்களை தூர் வார கிராம பொதுமக்களும், எம்.பி முரசொலியும் பெரும் ஒத்துழைப்பை வழங்கினர் என்றார்.