கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னர் கால வரலாற்று சிறப்பு மிக்க பல கோட்டைகளும், கல்வெட்டுகளும், நினைவுச் சின்னங்களும் நிறைந்துள்ளன. ஆனால், அவை முறையாக பாதுகாக்கப்படாததால் பொலிவிழந்து அழிந்து வருகின்றன. தக்கலை அருகே மருந்துக்கோட்டை பகுதியில் உள்ள மையக்கோட்டை எனும் திருவிதாங்கூர் மன்னர் கால கோட்டை மிகச் சிறப்பானது. பல வரலாறு கொண்ட பழமையான இக்கோட்டை தற்போது பராமரிப்பின்றி சிதைந்து புதருக்குள் புதைந்து வருகிறது.
இந்த கோட்டை 1700ம் ஆண்டுகளில் திருவிதாங்கூர் ஆட்சியாளரான மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அப்போதைய அரசியல் சூழல், குளச்சல் போர் உள்ளிட்டவற்றால் இக்கோட்டை எழுந்தது. எதிரிகளுக்கு தண்டனை கொடுக்கும் இடமாக விளங்கியுள்ளது. இறந்த வீரர்களை எரிக்கவோ, அவர்களை கழுகுகளுக்கு உணவாக்கவோ இங்கு இடம் இருந்ததாக வரலாற்று நிகழ்வுகள் கூறுகிறது. எனவே இது மயானக் கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது.
உயரமான மலைப் பகுதியில் உள்ள இக்கோட்டை, கடல் மட்டத்தில் இருந்து 350 அடி உயரத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோட்டை நுழைவாயில் 6 அடி உயரம் கொண்டதாகவும், 400 அடி நீளம் கொண்டதாகவும், முன்புறம் இரு கொத்தளங்கள், கோட்டை மதில்களில் 44 துப்பாக்கி முனைகளை தொண்டதாகவும் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதி தற்போது பராமரிப்பின்றி மாயக்கோட்டையாக மாறி வருகிறது.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோட்டையின் பல்வேறு பகுதிகளும் சிதைந்த நிலையில், உள்பகுதியில் புதர்மண்டி கிடக்கிறது. அழிந்துபோவது கோட்டை மட்டுமா? வரலாற்று சாட்சியும் அல்லவா? வரலாற்று குறிப்புகளோ, சுற்றுலா ஆர்வலர்கள் இங்கு செல்ல உரிய ஏற்பாடுகளோ இதுவரை செய்யப்படவில்லை. இதனால் மிகுந்த சிரமப்பட்டு இங்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோருக்கு சமூக பொதுநல இயக்க பொதுச் செயலாளர் சங்கர பாண்டியன் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோட்டையை பராமரித்து, சுற்றுலா பயணிகள் பார்வையிட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.