தர்பூசணி குறித்த வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்: தோட்டக் கலை துறை துணை இயக்குநர் தீபா


தர்பூசணி பழங்களில் ரசாயன ஊசி செலுத்தி நிறமேற்றுவதாக பரப்பப்படும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தோட்டக்கலை துறை துணை இயக்குநர் தீபா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 10 மாவட்டங்களுக்கு மேல் 100 டிகிரியை கடந்து வெயில் வாட்டி வருகிறது. வேலூர் மாவட்டத்தை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்திலும் வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், வெப்பத்தால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை மக்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணாமாக தர்பூசணி, முலாம் பழம், கிர்னிப்பழம், நுங்கு ஆகியவற்றின் விற்பனை சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. இதில், வியாபார நோக்கத்தில் ரசாயன ஊசி செலுத்தி நீர்ச்சத்து மிகுந்த தர்பூசணி பழங்களில் சிவப்பு நிறம் உருவாக்கி அவை விற்பனை செய்யப் படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வேகமாக பரவியதால் தர்பூசணி விற்பனை பெரும் சரிவை சந்தித்தது. இதற்கு, தர்பூசணி விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, தர்பூசணி சாகுபடி செய்யும் மாவட்டங்களில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தர்பூசணி பழங்களின் தரத்தை பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் தீபா தலைமையில் தோட்டக்கலை அலுவலர்கள் தர்பூசணி சாகுபடி செய்யும் விவசாய நிலங்களில் நேற்று ஆய்வு நடத்தினர்.

இது குறித்து தோட்டக்கலை துறை துணை இயக்குநர் தீபா கூறும்போது, ”திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 120 ஏக்கர் பரப்பில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. தர்பூசணி பழங்கள் ரசாயனம் கலந்த ஊசி மூலம் சிவப்பு நிறமேற்றி தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் வதந்தி பரப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் தர்பூசணி சாகுபடி நிலங்களில் தோட்டக்கலை துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தர்பூசணி பழங்கில் எந்த ஒரு ரசாயனமும் செலுத்தப் படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இயற்கையில் தர்பூசணி பழத்தில் சிவப்பு நிறத்தை அளிக்கக்கூடிய லைகோபீன் என்ற பொருள் உள்ளது.

கோடை காலங்களில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்க தர்பூசணி பழங்களை அனைவரும் சாப்பிடலாம். தர்பூசணி பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் தர்பூசணியை அதிகமாக உட்கொள்ளலாம். தர்பூசணி குறித்து பரப்பப்படும் வீண் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

x