ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி, அங்கீகரிக்கிறது. கிராமப் புறங்கள், சிற்றூர், நகரம் என நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உருவாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் தரத்தை நம்பிக்கைக்கு உரிய முறையில் உறுதிப்படுத்தி, அதனை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு இந்த புவிசார் குறியீட்டு அங்கீகாரம் உதவுகிறது.
அந்த வகையில் தற்போது புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 68 பொருட்களுக்கு நமது மாநிலம் இக்குறியீட்டைப் பெற்றுள்ளது. உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என 5 வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை.
அதன்படி மதுரை மல்லி, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா, பழனி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 62 பொருட்கள் புவிசார் குறியீடுகளை பெற்றிருந்தன. இந்த நிலையில் மணப் பாறை முறுக்கு, மார்த் தாண்டம் தேன், கம்பம் பன்னீர் திராட்சை, ஆத்தூர் வெற்றிலை என்ற வரிசையில் தேன் சுவை கொண்ட பண்ருட்டி பலாவுக்கும், பழங்களிலேயே பழத்துக்கு வெளிப்புறத்தில் விதையை கொண்டுள்ள தனித்துவம் கொண்ட முந்திரிக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருட்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. அதிகமான புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் 79 பொருள்களுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் 2-ம் இடத்திலும் உள்ளது.
தோட்டக் கலை பயிர்களான பலாவுக்கும், முந்திரிருக்கும் அண்மையில் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நெய்வேலி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, அரியலூர் மாவட்டம் உள்ளிட்டப் பகுதிகளில் முந்திரி அடர்த்தியாக வளர்க்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் அனீசாராணி கூறுகையில், “புவிசார் குறியீடு பெற்ற பிறகு எந்த வட்டாரப் பகுதியை குறிப்பிட்டு விண்ணப்பிக்கப் பட்டதோ அந்த குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மட்டும் தான் அந்தப் பொருள் சம்பந்தப்பட்ட உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விற்பனைகளில் ஈடுபட முடியும். குறிப்பாக சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்ற ஊர்களில் தயாரிக்கப்பட்டு வந்தாலும், புவிசார் குறியீடு பெற்ற சிறப்பு தன்மையை பயன்படுத்தி அவர்களால் வியாபாரம் செய்ய முடியாது.
உதாரணத்துக்கு புதுக்கோட்டையிலும், அண்டை மாநிலமான கேரளாவிலும் பலா விளைவிக்கப்பட்டாலும் பண்ருட்டி பலா என சந்தைப்படுத்த முடியாது. அதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் விளையும் முந்திரியை பண்ருட்டி முந்திரி என சந்தைப்படுத்த இயலாது. இவ்விரு பழங்களுக்கும் தனித்தன்மை உண்டு. அதற்கு காரணம் மணலுடன் கூடிய செம்மண் வளமும், சுற்றுச் சூழலும் பண்ருட்டி பலாவுக்கும், முந்திரியின் சுவைக்கும் தனித்துவத்தை அளிக்கின்றன” என்றார்
இதுதொடர்பாக பண்ருட்டி பலா வியபாரியான சுரேஷ் கூறுகையில், “செம்மண் பூமி, எங்களுக்கு அளித்த கொடை இவ்விரு பழங்கள். இவற்றை முறையாக பயன்படுத்தத்தான் இப்பகுதி உற்பத்தியாளர்கள் தவறிவிட்டனர். புவிசார் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. ஆனால் அதுகுறித்த புரிதல் உற்பத்தியாளர்களி டமும் இல்லை, வியாபாரிகளிடமும் இல்லை.
அது குறித்த புரிதலை ஏற்படுத்தி, இவ்விரு பொருட்களின் மதிப்புக் கூட்டுதல் குறித்த பயிற்சியையும், அதை சந்தைப்படுத்தும் விதத்தையும் தோட்டக்கலைத் துறையினர் செய்தால் புவிசார் கிடைத்ததற்கான பயனை இப்பகுதி மக்கள் பெற முடியும்” என்று தெரிவிக்கிறார்.