மையோனைஸை மக்கள், வணிகர்கள் ஏன் தவிர்க்க வேண்டும்? - ஆட்சியர் விவரிப்பு


அரசால் தடை செய்யப்பட்டுள்ள மையோனைஸை பொதுமக்கள், வணிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் ஆனது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் உணவு வணிகர்கள் அதனை தயாரிக்கவோ, செய்யவோ கூடாது. அந்த வகையான மையோனை ஸை நுகர்வோரும் தவிர்க்க வேண்டும். கிருமி நீக்கம் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸை பயன்படுத்த வேண்டும்.

கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதால், அதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப் போக்கு, டைபாய்டு உட்பட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிப்பது, தயாரித்து இருப்பு வைப்பது, விநியோகம் செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்கு தடை செய்து, அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை மூட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிப்பது அல்லது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், மையோனைஸானது பறிமுதல் செய்யப்பட்டு, வணிகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், உணவு பாதுகாப்புத் துறையின்கள ஆய்வின் போது கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிக்கப் படுவது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்கு பின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கிருமி நீக்கம் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட முட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் முட்டை கலக்காத சைவ மையோனைஸ் அனுமதிக்கப்பட்டதாகும். அவை இரண்டும் பொட்டலமிடப்பட்டு உரிய விவரங்களுடன் விற்பனை செய்யப்பட வேண்டும்.

கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ சொந்த தயாரிப்பு உணவுப் பொருளாக உள்ளதால் அதை தயாரித்து விற்பனை செய்ய மத்திய உணவு பாதுகாப்பு உரிமத்தை https://foscos.fssai.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து ரூ.7,500 கட்டணம் செலுத்தி பெற்ற பின்னரே, தயாரித்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறினால் உரிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் கவனமாக தேர்வு செய்து உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட பச்சை முட்டையிலிருந்து தயாரித்த மையோனைஸை பயன்படுத்த வேண்டாம். மேலும், உணவு வணிகர்கள் தடை செய்யப்பட்ட மையோனைஸை தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. பொது மக்கள் உணவு சம்பந்தமான புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ் - அப் எண்ணுக்கு குறுஞ் செய்தியாகவோ அல்லது குரல் பதிவாகவோ தமிழ்நாடு நுகர்வோர் செயலி என்ற செயலியிலோ புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x