“தொழில் துறையில் சாதிக்க திருநங்கைகள் முன்வர வேண்டும்” - கோவை ஆட்சியர் அறிவுரை


கோவையில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் உரையாற்றினார்

கோவை: “தொழில் துறையில் பெரிய அளவில் மட்டுமின்றி, சிறிய அளவிலும் சாதிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே திருநங்கைகள் தொழில் தொடங்க முன்வர வேண்டும்” என, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்தார்.

மாவட்ட சமூகநலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 2) நடந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமை வகித்து பேசியதாவது: “திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பும், சமூக அங்கீகாரத்தையும் அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்று கொள்ளும் நோக்கத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் வழங்குவது மூலம் அரசின் சார்பில் அவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் எளிதில் பயன் பெற முடியும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள், ஊரக பகுதிகளில் வீடுகள், கல்வி, வாழ்வாதாரம் குறித்து கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

மாவட்ட தொழில் மையம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகிய அரசு துறைகளில் மூலம் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருநங்கைகள் தொழில் முனைவோர்களாக வர வேண்டும். பெரிய அளவில் மட்டுமல்லாமல் சிறிய அளவிலான தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளை பெற்று தொழில் தொடங்கலாம்.

தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனாளிகளின் பங்கு தொகை செலுத்தமுடியாமல் இருக்கின்றவர்களுக்கு வங்கி கடனுதவிகள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக முகாமில் வேலைவாய்ப்பு, வீடுகள், வங்கி கடனுதவி, ஆதார் கார்டு திருத்தம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளிட்டவை தொடர்பாக கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் திருநங்கைகள் வழங்கினர்.

திருத்தம் செய்வதற்கான அரங்கு அமைக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 18 வயது நிரம்பிய திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்ப படிவம், மற்றும் திருத்தம் மேற்கொள்ளும் படிவமும் வழங்கப்பட்டது.

x