வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு ஒரு வாரமே உள்ளதால், சாகச கிணறு, ராட்டினங்கள் உள்ளிட்டவற்றை பொருத்தும் பணியில் இரவு பகலாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக, கடந்த 16-ம் தேதி திருக்கம்பம் நடும் விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.
8 நாள் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை 24 மணி நேரமும் திறக்கப்பட்டிருக்கும். பக்தர்களும் நேர்த்திக்கடனை இரவும் பகலும் செலுத்துவர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் பொழுதுபோக்குக்காக ராட்டினம், சர்க்கஸ், மாயாஜாலம், சாகசம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
இதற்காக, கோயிலின் மேற்குப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ராட்டினங்கள் உள்ளிட்டவற்றை பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாகசக் கிணறு, கொலம்பஸ், டோரா டோரா, கப் அண்ட் சாஸர் உள்ளிட்ட 35 வகையான ராட்டினங்கள் இங்கு அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராட்டின உரிமையாளர்கள் கூறுகையில், திருவிழாவுக்கு ஒரு வாரமே உள்ளதால் ராட்டினங்களை இரவும் பகலும் பொருத்தி வருகிறோம். இப்பணி முடிந்ததும் மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்றனர்.