மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்: கார்கே உறுதி


புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 சுற்றுலாப் பயணிகளை ஈவுஇரக்கமின்றி சுட்டுகொன்ற நிலையில், தீவிரவாதத்தை வேரறுக்கும் பணியில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று காங்கிரஸ் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: நம் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது தீவிரவாதிகள் நேரடி தாக்குதலை நடத்தியுள்ளனர். இது, காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. கருத்துவேறுபாடான அரசியலுக்கு இது நேரமில்லை.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு உரிய நீதியினை பெற்றுத்தர கட்சிவேறுபாடின்றி பணியாற்ற வேண்டிய தருணம் இது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்தி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்திரை பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.

தீவிரவாதம், பிரிவினைவாதத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. ஏனெனில், இதற்கான போரில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க அரசுடன் அனைத்து வகையிலும் இணைந்து செயல்பட காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

x