பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறும்போது, “பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான, முட்டாள்தனமான, கொடூரமான செயல். இது கடும் கண்டனத்துக்குரியது. நமது மாநிலத்தை நம்பி சுற்றுலா வந்த பயணிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சிரமமின்றி வெளியேற வசதியாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே போக்குவரத்தை ஒழுங்கு படுத்த நிர்வாகத் தினருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்களின் நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல் படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
இழந்த உயிர்களை இந்த நிதி உதவியால் ஈடுசெய்ய முடியாது. அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பக்கம் ஜம்மு காஷ்மீர் அரசு உறுதியாக நிற்கிறது என்பதற்கு அடையாளமாகவே இந்த இழப்பீடு அறிவிக்கப் பட்டுள்ளது என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.