போட்டி நிறுவனத்துக்கு எதிராக சர்ச்சையான வகையில் "சர்பத் ஜிகாத்" என்று கூறி புரோமோஷன் விளம்பரத்தை வெளியிட்ட பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனர் ராம்தேவின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த டெல்லி உயர் நீதிமன்றம் அவரின் செயலை வன்மையாக கண்டித்துள்ளது.
வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது ஹம்தார்ட் நிறுவனத்தின் "ரூக் அப்ஸா" என்ற பழரச பானம். இதற்கு போட்டியாக, பதஞ்சலி நிறுவனம் ரோஸ் சர்பத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அப்போது யோகா குரு ராம்தேவின் புரமோஷன் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில், எதிர்தரப்பான ஹம்தார்ட் நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடாமல் ராம்தேவ் அந்த வீடியோவில் பேசுகையில் , “ அந்த நிறுவனம் சர்பத் விற்ற பணத்தை மசூதிகள் மற்றும் மதரஸாக்களை கட்டுவதற்கு பயன்படுத்துகிறது.
நீங்கள் அந்த சர்பத்தை வாங்கி அருந்தினால் நாட்டில் மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் அதிக அளவில் பெருகிவிடும். ஆனால், நீங்கள் பதஞ்சலி ரோஸ் சர்பத்தை வாங்கி அருந்தினால் குருகுலம், பதஞ்சலி பல்கலைக்கழகம் கட்டப்படும். லவ் ஜிகாத், வாக்கு ஜிகாத் போன்று தற்போது சர்பத் ஜிகாத் நடக்கிறது" என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு எதிராகவும், சமூக ஊடகங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்க உத்தரவிடக்கோரியும் ரூக் அப்ஸா சர்பத் தயாரிப்பு நிறுவனமான ஹம்தார்ட் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி பன்சால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹம்தார்ட் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி நீதிமன்றத்தில் வாதிட்டதாவது: "ரூக் அப்ஸா" தயாரிப்பை இழிவுபடுத்துவதை தாண்டி இது உண்மையில் அதிர்ச்சி அளிக்கும் வழக்கு.. சமூக ரீதியில் பிளவை உண்டாக்ககூடிய வெறுப்பு பேச்சை சமூக ஊடகங்களின் மூலமாக ராம்தேவ் விதைத்துள்ளார். ராம்தேவின் பதஞ்சலி பிராண்ட் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான பிராண்ட். ஆனால் மற்ற பிராண்டை இழிவுபடுத்தாத வகையில் அவர்கள் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்" என்றார்.
ஆனால், ராம்தேவ் தரப்பில் யாரும் ஆஜராகததால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று பதஞ்சலி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நண்பகல் விசாரணையின்போது பதஞ்சலி தரப்பு வழக்கறிஞர் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.
இதையடுத்து, ராம்தேவ் சார்பில் வழக்கறிஞர் ராஜீவ் நாயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஹம்தார்ட் தயாரிப்புக்கு எதிரான விளம்பரத்தை பதஞ்சலி நிறுவனர் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
பின்னர், ரூக் அப்ஸாவை பாதிக்கும் வகையில் எந்தவொரு அறிக்கை அல்லது விளம்பரம் அல்லது சமூக ஊடக பதிவுகளை வெளியிட மாட்டேன் என்று ராம்தேவ் உறுதிமொழி அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரு வாரத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோரிய நீதிமன்றம், வழக்கை வரும் மே 1 -ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது. அத்துடன் ராம்தேவின் "சர்பத் ஜிஹாத்" கருத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.