இந்தியாவின் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு அடித்தளம்: குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி


புதுடெல்லி: அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21-ம் தேதி குடிமை பணி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அரசு நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு அவர் விருதுகளை வழங்கினார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

குடிமைப் பணி அதிகாரிகள், இந்தியாவின் இரும்பு தூண்கள் என்று சர்தார் படேல் அழைத்தார். அரசு அதிகாரிகள் நேர்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இந்த நேரத்தில் சர்தார் படேலை உணர்வுபூர்வமாக நினைவுகூர்கிறேன்.

செங்கோட்டையில் இருந்து நான் உரையாற்றியதை இப்போது மீண்டும் கூறுகிறேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அல்ல, 1000 ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறோம். அதற்கேற்ப திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். ஒரு சக்கரத்தால் தேரை நகர்க்க முடியாது. இதேபோல ஒரு தனிநபரால் நாட்டை முன்னேற்ற முடியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க முடியும்.

இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் தொழில்நுட்பங்கள் மாறுகின்றன. புதிய இயந்திரங்கள், கருவிகள் அறிமுகமாகின்றன. காலத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும். பழைய முறைப்படி ஆட்சி நிர்வாகத்தை நடத்த முடியாது. தொழில்நுட்பங்களின் உதவியோடு ஆட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்த வேண்டும். இதற்கேற்ப கடந்த 2014-ம் ஆண்டில் புதிய நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தினோம். இதன்காரணமாக இப்போது அரசு திட்டங்கள் அதிவிரைவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

எரிசக்தி, விண்வெளி உட்பட பல்வேறு துறைகளில் பாரதம் சாதனை படைத்து வருகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் தற்போது 5-வது இடத்தில் இருக்கிறோம். விரைவில் நாம் 3-வது இடத்தை எட்டிப் பிடிப்போம். இதற்கு குடிமைப் பணி அதிகாரிகள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த வளர்ச்சியை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு கிராமமும், எந்தவொரு குடும்பமும் பின்தங்கிவிடக் கூடாது. அனைத்து கிராமங்களும், அனைத்து குடும்பங்களும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். அனைத்து மாணவ, மாணவியருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். நாடு முழுவதும் தொழில் தொடங்க ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் பாரதம் அபார வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டில் பாரதத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. 2023-ம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மாநாடுகள் நடைபெற்றன. அப்போது பாரதத்தின் வளர்ச்சி, தொழில்நுட்பம், நிர்வாக திறமையை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்தது.

இன்றைய சூழலில் இந்தியாவில் முதலீடு செய்ய ஒட்டுமொத்த உலகமும் ஆர்வமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், கடைநிலை கிராமங்கள் வரை சென்றடைய வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. புதிதாக 3 கோடி கான்கிரீட் வீடுகளை கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணை்பபு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.

குறு, சிறு தொழில் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. நமது தொழில் நிறுவனங்கள் உள்நாடு மட்டுமன்றி, சர்வதேச அளவில் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு, குவான்டம் பிசிக்ஸ் துறைகளில் பாரதத்தின் இளைஞர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். சர்வதேச சவால்களுக்கு பாரதத்தில் எளிய முறையில் தீர்வு காணப்படுகிறது.

இயற்கை பேரழிவு, பெருந்தொற்று, சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதில் 10 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் பாரதம் செயல்படுகிறது. வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும். இதற்கு 5 கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். அடிமைத்தன மனநிலையில் இருந்து விடுபட வேண்டும். நமது பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். இவற்றை பின்பற்றினால் பாரதம் அதிவேகமாக முன்னேறும். 140 கோடி இந்தியர்களின் கனவுகளை நனவாக்க குடிமைப் பணி அதிகாரிகள் அயராது அழைக்க வேண்டும். நீங்கள் அதிகாரிகள் மட்டுமல்ல, பாரதத்தை செதுக்கும் சிற்பிகள்.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

x