வங்கதேசத்தில் இந்து அமைப்பின் தலைவர் பபேஷ் சந்திர ராய் கடத்தி கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் தினாஜ்பூர் மாவட்டம் பைரல் பகுதியை சேர்ந்தவர் பபேஷ் சந்திர ராய் (58). இவர் வங்கதேச பூஜா உத்ஜபன் பரிஷத் என்ற அமைப்பின் பைரல் வட்டார துணைத் தலைவராகவும் அப்பகுதி இந்துக்களின் முக்கிய தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை பபேஷ் சந்திர ராய் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளின் வந்த 4 பேர் அவரை கடத்திச் சென்றனர். நரபாரி கிராமத்திற்கு கொண்டு சென்று அவரை கொடூரமாக தாக்கினர். இதில் மயக்கமடைந்த அவரது உடலை ஒரு வேனில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவரை உள்ளூர் மருத்துவமனைக்கும் பிறகு தினாஜ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் பபேஷ் ராய் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
வங்கதேசத்தில் மத சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல் குறித்து இந்து சமூகத்தினரும் மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த சம்பவம் அவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 'எக்ஸ்' தளத்தில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று வெளியிட்ட பதிவில், “வங்கதேசத்தில் இந்து தலைவர் பபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி துயரம் அளிக்கிறது. முந்தைய இதுபோன்ற சம்பவங்களின் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் சுற்றித்திரியும் வேளையில் இடைக்கால அரசின் கீழ் இந்துக்கள் திட்டமிட்டு துன்புறுத்தப்படுவதன் தொடர்ச்சியாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் சாக்குப்போக்குகளை கூறாமல் அல்லது பாகுபாடு காட்டாமல் இந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை இடைக்கால அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது