மும்பை: மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்கவே முடியாது என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது மொழியாக இந்தி மொழியை கட்டாயமாக கற்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. 2025–26 கல்வியாண்டிலிருந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி கட்டாய மூன்றாம் மொழியாக மாறும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. இதற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்கவே முடியாது என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனாவின் (UBT) தொழிலாளர் பிரிவான பாரதிய காம்கர் சேனா நிகழ்வில் பேசிய தாக்கரே, தனது கட்சிக்கு இந்தி மொழி குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் அது ஏன் திணிக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
மகாராஷ்டிராவில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக மாற்றுவதற்கான மகாராஷ்டிரா அரசாங்கத்தின் முடிவு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்ட களத்தில் உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்தாக்கரே கூறுகையில், ‘இந்தி மொழி திணிப்பு போன்ற பெரிய பிரச்சினைகள் தலைதூக்கும் போது எங்களுக்கு இடையேயான விவகாரங்கள் மிக சிறியதாகிவிடும். மகாராஷ்டிராவின் நலன்களுக்காக, மராத்தி மக்களுக்காக எங்களுக்கு இடையேயான மோதல்களை கைவிட்டுவிட்டு ஒருங்கிணைந்து செயல்படப் போகிறோம்’என்றார்