ஓட்டுக்கு பணம் வாங்கினால் மிருகமாக பிறப்பீர்கள்: மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏ உஷா தாக்கூர் சாபம்


இந்தூர்: ‘‘ஓட்டுக்கு பணம் வாங்கினால், அடுத்த பிறவியில் மிருகமாக பிறப்பீர்கள்’’ என பாஜக எம்எல்ஏ.,வும், மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சருமான உஷா தாக்கூர் சாபம் விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ உஷா தாக்கூர். இவர் தனது மோவ் சட்டப்பேரவை தொகுதியில் ஹசல்பூர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்க சென்றார். அப்போது அவர் பேசியதாவது:

பாஜக அரிசன் கிசான் சம்மான் நிதி, லாட்லி பேனா யோஜனா என பல திட்டங்களின் கீழ் ஒவ்வொரு பயனாளிகளின் வங்கி கணக்கிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் வருகிறது. ஆனால், வாக்காளர்கள் அரசியல் கட்சியினரிடம் ரூ.500, ரூ.1000 பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இது வெட்கக்கேடான விஷயம்.

கடவுள் கவனிக்கிறார்: எல்லாவற்றையும் கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். வாக்களிக்கும்போது நேர்மையாக இருங்கள். ஓட்டுக்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டு நீங்கள் வாக்களித்தால், அடுத்த பிறவியில் ஆடு, நாய், பூனை, ஒட்டகம் என மிருகங்களாக பிறப்பீர்கள். இவ்வாறு உஷா தாக்கூர் சாபம் விடுத்தார். இது குறித்த கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, ‘‘இது உஷா தாக்கூரின் பழமைவாத சிந்தனையை’’ காட்டுகிறது என்றனர்.

x