ராபர்ட் வதேராவுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை: அமலாக்கத் துறை தகவல்


ராபர்ட் வதேராவுக்கு எதிராக 3 வழக்குகளில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டில் ஹரியானாவின் குருகிராம் பகுதியில் 3.5 ஏக்கர் விவசாய நிலத்தை அவர் வாங்கினார். இந்த நில விற்பனையில் பண மோசடி, முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் ராஜஸ்தானின் பீகானீரில் 31.61 ஹெக்டேர் நிலத்தை ராபர்ட் வதேரா வாங்கினார். இந்த நில விற்பனையில் பண மோசடி, முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சர்வதேச ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கும் ராபர்ட் வதேராவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வதேராவுக்காக லண்டனில் சொகுசு வீட்டை பண்டாரி வாங்கி கொடுத்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இது பினாமி பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் கடந்த 15, 16, 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேராவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 3 வழக்குகள் தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து 3 வழக்குகளிலும் ராபர்ட் வதேராவுக்கு எதிராக நீதிமன்றங்களில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அண்மையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

x