அமராவதி: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் ரிவர் வேலி ஷாப் ஹவுஸ் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை 9.45 மணியளவில் இப்பள்ளி இயங்கும் 2-வது மற்றும் 3-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த சிவில் டிபென்ஸ் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். எனினும் 15 மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு மாணவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கருக்கு கைகள் மற்றும் கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பவன் கல்யாண், நேற்று மாலை விசாகப்பட்டினம் சுற்றுப்பயணத்தில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு ஆகியோர் பவன் கல்யாணை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது மகனின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.