பெங்களூரு: இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம் உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் அளித்த புகாரில், “நான் இந்திய அறிவியல் மையத்தின் நீடித்த தொழில் நுட்பப் பிரிவில் பணி புரிந்தேன். கடந்த 2014ம் ஆண்டு நான் பணியில் இருந்தபோது போலியான பாலியல் வழக்கில் சிக்கவைக்கப் பட்டு பணி நீக்கம் செய்யப் பட்டேன். அப்போது சாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில் இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய அறிவியல் மையம் தரப்பில் இருந்தோ அல்லது அதன் முன்னாள் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்த கிரிஷ் கோபால கிருஷ்ணன் தரப்பில் இருந்தோ இதுவரை எந்த எதிர்வினையும் வரவில்லை. இதே குற்றச்சாட்டின் கீழ் கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியார், சந்தியா விஸ்வரய்யா, ஹரி கேவிஎஸ் தாசப்பா, பலராம் பி, ஹேமலதா மிஸ்ஸி, சத்தோபத்யாய, பிரதீப் சாவ்கர், மனோகரன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.