கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு


பெங்களூரு: ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த ரேணுகா சாமியை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக பவித்ரா கவுடா மற்றும் 15 பேருடன் ஜூன் 11 அன்று தர்ஷன் கைது செய்யப்பட்டார். 33 வயதான ரேணுகாசாமி, பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தர்ஷன் கொலை செய்ததாகவும் போலீஸார் கூறியுள்ளனர். பெங்களூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள மழைநீர் வடிகால் அருகே ஜூன் 9-ம் தேதி ரேணுகாசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

செப்டம்பரில், பெங்களூரு போலீஸார் இந்த வழக்கில் தொடர்புடைய 17 நபர்களுக்கு எதிராக 3,991 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்தனர், இதில் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா ஆகியோர் அடங்குவர். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தர்ஷன் மேலும் மூவருடன் சுதந்திரமாக சுற்றித் திரிந்த புகைப்படங்கள் ஆகஸ்ட் மாதம் வெளிவந்ததால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, அவர் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

47 வயதான நடிகர் தர்ஷன் தனக்கு இரண்டு கால்களிலும் உணர்வின்மை இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் ஜாமீன் கோரியிருந்தார். மேலும், மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை செய்ய கடந்த அக்டோபர் 30ம் தேதி 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அவர் பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கர்நாடக ஐகோர்ட்டில் நிரந்தர ஜாமீன் கோரியும் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது கடந்த 9-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். அதே நேரத்தில் நேற்று வரை தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை.

இந்த நிலையில், இன்று கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவரது தோழி பவித்ரா கவுடா மற்றும் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

x