முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு தினம்: பிரதமர் மோடி, சோனியா, கார்கே அஞ்சலி!


ஜவஹர்லால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவுதினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அஞ்சலி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சி மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் இதர தலைவர்கள் ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

எக்ஸ் வலைதளத்தில் இந்தியில், மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், "நவீன இந்தியாவின் சிற்பி பண்டித ஜவஹர்லால் நேருவின் ஒப்பற்ற பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது.

இந்தியாவை அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் முன்னோக்கி கொண்டு சென்றவர் அவர். ஜவஹர்லால் நேரு ஜனநாயகத்தின் அர்ப்பணிப்புள்ள பாதுகாவலராகவும், நமது உத்வேகத்தின் மூலமாகவும் இருந்தார்.” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு

காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவீன இந்தியாவின் சிற்பியும், நாட்டின் முதல் பிரதமருமான பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அவரது நினைவு நாளில் மரியாதைக்குரிய அஞ்சலி. ஒரு தொலைநோக்கு பார்வையாளராக, சுதந்திர இயக்கம், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பின் அடித்தளத்தை அமைத்தல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவைக் கட்டியெழுப்ப தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அவரது மதிப்புகள் எப்போதும் நம்மை வழிநடத்தும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x