பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு: தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!


உச்சநீதிமன்றம், பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் கூறி, அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் பாத்திமா என்பவர் வழக்கறிஞர் ஆனந்த் எஸ்.ஜோந்தலே மூலம் மனு தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.சி.சர்மா

அந்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியை 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.சி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரிடம் "நீங்கள் இது தொடர்பாக அதிகாரிகளை அணுகியுள்ளீர்களா? வழக்கு தொடுப்பதற்கு முன்பு குறைகளை நிவர்த்தி செய்ய முதலில் அதிகாரிகளை அணுக வேண்டும்” என்றனர்.

தேர்தல் ஆணையம்

இதைத் தொடர்ந்து மனுதாரர் மனுவைத் திரும்பப் பெற்றார். இதையடுத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் எஸ். ஜோந்தலே தாக்கல் செய்த இதேபோன்ற மனுவை விசாரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

x