உத்தராகண்ட்டின் யமுனோத்ரி நுழைவாயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் மலைப்பாதையில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி யாத்திரை செல்லும் நுழைவுவாயில் பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது. பத்ரிநாத் யாத்திரை நாளை தொடங்கப்பட உள்ளது. 'சார் தாம்' யாத்திரை என அழைக்கப்படும் இந்த யாத்திரையின் முதல் நாள் யமுனோத்ரிக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.
மலைப்பாதையில் ஏராளமான பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. மேலும், அரசு நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.
பக்தர்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததால், உத்தராகண்ட் அரசின் நிர்வாக குளறுபடிக்கு பக்தர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், உத்தர்காசி காவல் கண்காணிப்பாளர் அர்பன் யாதுவன்ஷி கூறுகையில், “சமூக வலைதளங்களில் பரவும் கூட்ட நெரிசல் வீடியோ நேற்று மாலை 5 மணியளவில் ஜானகி சாட்டி - யமுனோத்ரி தாம் இடையேயான பாதையில் எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் 200 மீட்டர் சுற்றளவில் உள்ள ஒரு பகுதியில் மட்டுமே உள்ளது.
யமுனோத்ரி தாம் நோக்கி செல்லும் பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்த நிலையில் அங்கு பலத்த மழையும் பெய்தது. இதன் விளைவாக மக்கள் தஞ்சமடைவதற்கு கூடினர். இதுவே நெரிசலுக்கு வழிவகுத்தது" என்றார்.
தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.