சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிடியா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் விஷ்ணு தியோ சாய், "கங்களூர் பகுதியில் துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை 12 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் நமது பாதுகாப்புப் படையினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர்" என்று அவர் கூறினார். மேலும், இந்த நடவடிக்கைக்காக பாதுகாப்பு படையினர் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் கடந்த ஒரு மாதத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான மூன்றாவது மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். ஏப்ரல் 16 அன்று, கான்கேர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 30 அன்று நாராயண்பூர் மற்றும் காங்கர் மாவட்டங்களின் எல்லையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மற்றொரு என்கவுண்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் இந்த ஆண்டு இதுவரை நடத்தப்பட்ட என்கவுன்டர்களில் 103 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் வாசிக்கலாமே...