குஜராத்தில் பாஜக நிர்வாகி மகனால் வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்ட புகாரில், குஜராத் மாநிலம், பார்த்தம்பூர் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 3வது கட்ட மக்களவைத் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், குஜராத் மாநிலம், தாஹேத் மக்களவைத் தொகுதிக்கும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் தாஹேத் தொகுதிக்கு உள்பட்ட பார்த்தம்பூர் வாக்குச்சாவடி பாஜகவினரால் கைப்பற்றப்பட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றன.
சமூக ஊடகங்களில் இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகின. அந்த வீடியோவில் பாஜக தலைவரின் மகன் விஜய் பாபோர் ஒரு வாக்குச் சாவடிக்குள் நுழைந்து மோசடியாக வாக்களிப்பில் ஈடுபட முயற்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
வாக்குச்சாவடியை விஜய் பபோர் கைப்பற்றி நேரலை ஒளிபரப்பு செய்ததாக புகார் எழுந்தது. மேலும், அவர் வாக்குச் சாவடி அதிகாரிகளை திட்டியதாகவும், மோசடியாக வாக்களிப்பில் பங்கேற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக தஹோத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரபாவன் தவியாத், விஜய் பாபோர் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மகிசாகர் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், பார்த்தம்புரா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 220-ல் வரும் 11-ம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி அங்கு அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.