பூமியும், சூரியக்குடும்பமும் அழியப்போகிறது- இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி தகவல்!


நிகர் ஷாஜி

இன்னும் 1,000 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் சூரியன் விரிவடைய தொடங்கும் என்றும், அதன் பின்னர் சூரிய குடும்பமே இருக்காது, பூமி உள்ளிட்ட கோள்கள் அழிந்துவிடும் என்றும் ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி கூறியுள்ளார்.

பூமி, சூரிய குடும்பம், அண்டம், பால்வழி அண்டம், விண்மீன் திரள்கள், பிரபஞ்சம் தொடர்பான ஆய்வுகள் ஒரு பக்கம் நடந்துக்கொண்டே இருக்கிறது. அதேபோல சூரியன் பற்றிய ஆய்வும் மறுபுறம் நடந்துக்கொண்டிருக்கிறது. நம்முடைய சூரியன் மிகவும் தனித்துவமானது. வானத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியன்தான். சிவப்பு, வெள்ளை நிறத்தில் கூட சூரியன்கள் உண்டு. நம்முடையது மஞ்சள் குள்ளகோள் வகையை சேர்ந்தது. இருப்பினும் நமது சூரியன் வெண்மை நிறத்தில்தான் இருக்கும். இது மிதமான அளவில் வெப்பத்தையும் ஒளியையும் வெளியும். அதனால்தான் பூமியில் உயிர்கள் தோன்றியுள்ளன. அந்த வகையில் நம் சூரியன் தனித்துவமானதுதான்.

ஆனால் சூரியனும் ஒரு நாள் இறந்து போகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியனமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் ஹைட்ரஜன் அனைத்தும் தீர்ந்து போனபின் ஹீலியம் எரிபொருளாக பயன்படும். அதுவும் தீர்ந்து போனவுடன் சூரியன் சுருங்க தொடங்கும். ஆனால் இது சுருங்குவதற்கு முன்னர் விரிவடைய தொடங்கும். இது ஒட்டுமொத்த சூரிய குடும்பத்தை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சூரியக் குடும்பம்

இது தொடர்பாக தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, "சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கெனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த குடும்பம் செயல்படத் தேவையான எரிபொருள், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். அதன்பின், சூரியன் விரிவடைந்துகொண்டே வந்து ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் அழித்துவிடும். இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் குடும்பமும், பூமி உள்ளிட்ட பிற கோள்கள் எதுவுமே இருக்காது" என்று கூறியுள்ளார்.

இந்த பிரபஞ்சத்தில் இரண்டு நட்சத்திரங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. இதனை பைனரி ஸ்டார்ஸ் என்று சொல்வார்கள். ஆனால், நமது சூரிய குடும்பத்தில் மட்டுமே ஒரேயொரு நட்சத்திரமாக சூரியன் இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நல்லதுதான். ஏனெனில் தற்போது சூரியனிலிருந்து நாம் பெறும் வெப்பம் போதுமானதுதான்.

இதுவே இரண்டு நட்சத்திரங்கள் இருப்பின் அது பூமியை அதிக வெப்பமடைய வைத்து உயிர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக இதை மாற்றிவிடும். ஆனால் நமது சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கோள் ஒரு தோல்வியடைந்த நட்சத்திரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும் விண்வெளியில் இருந்து வரும் பல விண்கற்கள் பூமியில் விழாமல் பாதுகாப்பது இந்த வியாழன் கோள்தான். ஏனெனில் இதன் ஈர்ப்பு விசை அதிகம். எனவே இதன் அருகில் எந்த விண்கற்கள் சென்றாலும் அதை வியாழன் இழுத்து பிடித்து வைத்துக்கொள்ளும். எனவே பூமி தப்பித்துள்ளது. இப்படி சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் பூமியை காப்பாற்றுகிறது என்று சொல்லலாம். ஆனால் இன்றும் 1,000 கோடி ஆண்டுகள் கழித்து சூரியனின் எரிபொருள் தீர்ந்த பிறகு. அது விரிவடையும். இப்படி விரிவடையும் போது புதன், வெள்ளி, பூமி போன்ற கோள்களை அது தனக்குள்ளே விழுங்கி விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படியெனில் 1,000 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் பூமி இருக்காது. எனவேதான் மேலை நாடுகள் விண்வெளி ஆய்வில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

x