ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன், சந்தேக நபர்கள் ஊடுருவலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக இரண்டு வெவ்வேறு இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டத்தை ராணுவ வீரர்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தரப்பில், சுந்தர்பானி பகுதியில் நேற்று நள்ளிரவு ட்ரோன் நடமாட்டம் கண்டறியப்பட்டது. கெரி செக்டாரில் பயங்கரவாதிகள் என நம்பப்படும் சில நபர்களின் சந்தேகத்துக்கிடமான நடமாட்டம் கண்டறியப்பட்டது.
இந்திய எல்லைக்குள் நுழைந்த உடனேயே ராணுவ வீரர்கள் நான்கு ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து பாகிஸ்தானின் ட்ரோன், கட்டுப்பாட்டு கோட்டின் மறுபுறம் சென்றது.
இதேபோல், கேரி செக்டாரில் ஊடுருவ முயன்ற நபர்கள், இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை நோக்கி தப்பி ஓடிவிட்டனர்.
ஊடுருவல் நடந்த இடத்தில் சதிகாரர்கள் எதையாவது ட்ரோன் அல்லது வேறு எதையாவது விட்டுச்சென்றுள்ளார்களா என்பதை கண்டறிய தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தனர்.