இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.
நிகழாண்டில் முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அந்த விருதுகளை வழங்கினார். அதன்படி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட விருதை, அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார்.
இதேபோல் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கான விருதை அவரது பேரன் ஜெயந்த் சிங்கும், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கான விருதை, அவரது மகன் பிரபாகர் ராவும், முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கான விருதை அவரது மகன் ராம்நாத் தாக்கூரும் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு, வயோதிகம் காரணமாக அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அத்வானியின் இல்லத்துக்கு நாளை நேரில் சென்று விருது வழங்குவார் என குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழாவில் குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பி.வி.நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், எம்.எஸ். சுவாமிநாதன், கர்பூரி தாக்கூர் ஆகியோர் இறந்துவிட்டதால் அவர்களது வாரிசுகள், விருதுகளை பெற்றுக்கொண்டனர்.