ஓலா, உபெர் டூவீலர் டாக்சிகளுக்கு தடை... கர்நாடக அரசு அதிரடி!


ஓலா, உபெர், ரேபிடோ டூவிலருக்கு தடை

டூவீலர் டாக்சிகளில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி அந்த சேவைக்கு தடை விதித்து கர்நாடகா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓலா, உபெர், ரேபிடோ என்ற பெயரில் டூவீலர் டாக்சி சேவைகள் நாடு முழுவதும் பரவலாக இயக்கப்பட்டு வருகிறது. ஒரே நபர் பயணிப்பதற்கும், ஒரு இடத்துக்கு விரைவாக செல்வதற்கும் டூவீலர் டாக்சிகள் பயன்பெறுகின்றன. எனினும் இதில் சில பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றன. இதில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கர்நாடகாவில் டூவீலர் டாக்சிகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

கர்நாடகா அரசு

ஓலா, உபெர், ரேபிடோ என்ற பெயரில் இயங்கும் டூவீலர் டாக்சிகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒருபுறம் இருக்க, இரவு நேரங்களில் வேலை முடித்து வீடு திரும்பும் பெண்கள் டூவீலர் டாக்சிகளை தேர்வு செய்கின்றனர். அவ்வாறு டூவீலர் டாக்சியில் செல்லும் பெண்களில் சிலருக்கு பாலியல் சீண்டல்களும் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

டூவீலர் டாக்சிகளால் நாளுக்கு நாள் எழும் இதுபோன்ற பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை கர்நாடகாவில் டூவீலர் டாக்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசின் போக்குவரத்துத் துறையின் துணை இயக்குநர் புஷ்பா வெளியிட்ட உத்தரவில், ’டூவீலர் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பைக் டாக்சிகள் பெரிய அளவில் மக்களுக்கு உதவவில்லை என்று கூறி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

x