டெல்லியை குளிர்வித்த மழை; குறைந்தது காற்று மாசுபாடு - மக்கள் மகிழ்ச்சி!


டெல்லி காற்று மாசு

டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக இருந்து வரும் நிலையில், நேற்று பெய்த மழையால் புகைமூட்டமும் மாசுபாடுகளும் ஓரளவுக்கு குறைந்துள்ளன.

தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது.

மழை

மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனுடன், இருமல், நரம்புத் தளர்ச்சி மற்றும் கண்களில் எரியும் உணர்வு போன்ற பிரச்சினைகளையும் மக்கள் சந்திக்கின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக இருந்து வரும் நிலையில், நேற்று பெய்த மழையால் புகைமூட்டமும் மாசுபாடுகளும் ஓரளவுக்கு குறைந்துள்ளன. டெல்லியில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரக் கூடும் என்பதால் காற்று மாசுபாடு மேலும் குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் செயற்கை மழையை பெய்விப்பது தொடர்பாக டெல்லி அரசு ஆலோசனை நடத்தி வந்த நிலையில், மழை பெய்திருப்பது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாசு தடுப்பு நடவடிக்கைகளை டெல்லி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

காற்று மாசு

தலைநகர் டெல்லியில் நேற்றிரவு ஆங்காங்கே மழை பெய்ததால் அங்கு காற்று மாசுபாட்டின் அளவு சற்றே குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 408 என்ற அளவில் இருந்தது. நேற்று மாலை இதுவே 437 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரக் குறியீடு 0 - 50 வரையில் இருந்தால், காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். அதுவே, அக்குறியீடு 400 - 500 ஆக இருந்தால், காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாக அர்த்தம். காற்றுமாசு தீவிரமாக உள்ள நிலையில் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் , அதிகரித்து வரும் மாசுபாட்டைச் சமாளிக்க தேசிய தலைநகரில் செயற்கை மழையைத் தூண்ட முயற்சிப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். நவ 20, 21 தேதிகளில் இதற்காக திட்டமிடப்பட்டுள்ள சூழலில் இப்போதைய மழை ஆறுதலாக அமைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

x