கருப்பு உடை அணிந்து கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த திருநங்கைகள்: தென்காசியில் பரபரப்பு!


குவிந்த திருநங்கைகள்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்சியரிடம் மனு அளிக்க கருப்பு உடை அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாவட்டத்தில் நீண்ட நாட்களாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு என்று தனியாக சொந்த வீடு கிடையாது.

எங்களுக்கு சொந்தமாக இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இதுவரை தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் அல்லது சமூக நலத்துறை சார்பில் மானிய கடன் பெற விண்ணப்பித்தாலும் ஒன்று இரண்டு நபர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

எங்களுக்கு கைத்தொழில் சம்பந்தமான எந்தவித பயிற்சியும் இதுவரை தென்காசியில் நடைபெறவில்லை, மாவட்டத்தை பொருத்தவரை திருநங்கைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தனியாக நடந்து சென்றாலும் கூட்டமாக சென்றாலும் தவறு செய்யாமலே காவல்துறையினர் தண்டிக்கின்றனர். பொது இடங்களில் சில நபர்களால் மனஉளைச்சலுக்கும் ஆளாகும் நிலை ஏற்படுகிறது எனவே, எங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்ததாக தெரிவித்தனர்.

x