கேரளாவை அச்சுறுத்தும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்... பாதுகாப்புக்காக கொல்லப்பட்ட 200 பன்றிகள்!


கொன்று புதைக்கப்படும் பன்றிகள்

கேரளாவில் உள்ள பண்ணையில் பன்றிகளுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்குள்ள பன்றிகளைக் கொன்று பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

பன்றிகள்

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு பன்றிப் பண்ணையில் இரண்டு பன்றிகள் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தன. அந்த பன்றிகளின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள விலங்குகள் நோய் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடைபெற்ற பரிசோதனையில் 2 பன்றிகளுக்கும் கொடிய வைரஸ் நோயான ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் கொடிய வைரஸ் நோய் பாதித்த பகுதிகளில் உள்ள இரு பண்ணைகளில் இருக்கும் மற்ற பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, 200-க்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டு, விதிமுறைகளின்படி பாதுகாப்பாக புதைக்கப்பட்டன.

பரிசோதனை

தொற்று பாதித்த பன்றி பண்ணைகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களுக்கு பன்றி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கொண்டுசெல்லக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றின் அச்சம் கலைந்து மக்கள் தற்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் விலங்குகளிடையே பரவ ஆரம்பித்திருப்பதால் கேரள மாநில மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x