கொரோனா காலத்தில் கண்டிராத ஊரடங்கு அச்சத்தில் புனே நகரம் உறைந்து போயிருக்கிறது. சூறாவளியாக சுழன்றடிக்கும் கொசுக்களால் நகர மக்கள் நரக அவஸ்தைக்கு ஆளாகி வருகிறார்கள்.
மனிதர்கள் மீதான கொசுக்களின் தாக்குதல் எக்காலத்தில் குறையாது தொடர்கிறது. மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா என கொசுக்களின் தயவால் பரவும் நோய்கள் மனிதர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. மனிதர்கள் உருவாக்கித் தரும் அசுத்தமும், நீர் தேங்கிய இடங்களில் அலட்சிய பராமரிப்புமாக, கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்க காரணமாகின்றன.
இவற்றின் மத்தியில் இதுவரை கண்டிராத வினோதமாக, மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் சூறாவளியாய் சுழன்றடித்த கோடிக்கணக்கான கொசுக்களால், நகர மக்கள் கதவு ஜன்னல்களை சாத்திக்கொண்டு வீடடைந்து கிடக்கின்றனர். கொரோனா காலத்தில் காணாத ஊரடங்கு அச்சம் என்றும் இதனை புனே மக்கள் வர்ணிக்கின்றனர். அந்தளவுக்கு கொசு சூறாவளி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
புனேவின் முத்தா ஆற்றின் மீது சுழன்று கொண்டிருக்கும் அசாதாரண நிகழ்வுகளை பதிவு செய்த பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி, நாட்டு மக்களை வாய்பிளக்கச் செய்துள்ளன. முந்த்வா, கேசவ்நகர் மற்றும் காரடி பகுதிகளில் பதிவான இந்த வீடியோக்கள், வான்வெளியில் தோரணமாய் சீறும் கொசு சூறாவளியை காட்டுகின்றன.
காரடியில் உள்ள முலா-முத்தா ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததே இந்த அச்சுறுத்தலுக்கு காரணம் எனத் தெரிய வருகிறது. அங்கிருந்து உபரி நீரை அகற்றும் பணியை 2 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக புனே புனே மாநகராட்சி தெரிவித்த போதிலும், இன்னும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஆற்றங்கரையில் உள்ள சிறிய அணை மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் பகுதிகளில், குறைந்த வரத்து காரணமாக தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்திக்கு உகந்த சூழல் நிலவுகிறது.
இதனால் கொதிப்படைந்த மக்கள் ’குடிமக்கள் உரிய நேரத்தில் வரிகளை செலுத்துவதற்கு ஈடாக, கொசுக்கள் டொரனாடோவை காதலர் பரிசாக வழங்கியதற்காக புனே மாநகராட்சிக்கு நன்றி’ என கிண்டலுடனும் கொசு சூறாவளி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!