பிரதமர் வேட்பாளர் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் ராகுலை பின்னுக்குத் தள்ளி மோடி முன்னிலை பெற்றுள்ளார்.
நாட்டின் 17வது மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 75 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே ஏப்ரல் 16ம் தேதியை உத்தேச தேர்தல் தேதியாக அறிவித்து, பணிகளைச் செய்து வருகிறது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்குப் பயிற்சிகள் மற்றும் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. அதேபோல், அரசியல் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தமிழகத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாஜக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை.
ஆனால், இதற்கு நேர்மாறாக இந்தியா கூட்டணியில், தமிழகத்தை கடந்து மற்ற மாநிலங்களில் கூட்டணிக்குள் கடும் அதிருப்தியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ராகுல் காந்தி, யாத்திரை சென்று கொண்டிருப்பது கட்சிக்குப் பலவீனத்தையே ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ‘டைம்ஸ் நவ்’ மற்றும் இடிஜி நிறுவனம் இணைந்து மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி, நரேந்திர மோடியே பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்றும் மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும் என்றும் 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி பிரதமராவதற்கு 17 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மோடி, ராகுல் தவிர மற்றவர்கள் பிரதமராக வருவதற்கு 19 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், மம்தா பானர்ஜிக்கு 15%, அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 12%, உத்தவ் தாக்கரேக்கு 8%, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 6% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.