சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 1628 நபர்களிடம் இருந்து 1 கோடியே 68 லட்சத்து 98 ஆயிரத்து 500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’ சென்னையில் வாகனச் சோதனையில், மது குடித்துவிட்டு வாகன ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனை செய்யும் போது மதுக்குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை முறையாக யாரும் செலுத்துவது இல்லை.
அபராதத் தொகை மற்றும் வழக்குக்களை முடிக்கும் பொருட்டு சென்னையில் 10 இடங்களில் சிறப்பு முகாம் போடப்பட்டது. அவ்வாறு போடப்பட்ட இந்த சிறப்பு முகாம் மூலம் கடந்த 2 வாரங்களில் மட்டும் 1628 மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் தீர்க்கப்பட்டு, அவர்களிடம் இருந்து 1 கோடியே 68 லட்சத்து 98 ஆயிரத்து 500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தொடரும். அபராதத் தொகை செலுத்தாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அபராத செலுத்தாத 319 நீதிமன்ற ஆணைப் பிறப்பிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என கூறப்பட்டுள்ளது.