புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மவுனம் கலைய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தாக்குதல் தொடங்கியதும் பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அப்போது கேள்வி எழுப்பிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாகிஸ்தானிடம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக தெரிவிப்பதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுமதி அளித்தது யார் என்றார்.
மேலும், அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமான தகவல் அளித்ததாக மத்திய அரசு வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது. அப்படி என்றால் இந்த தாக்குதலில் நாம் எத்தனை போர் விமானங்களை இழந்தோம் என்ற விவரத்தை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியிருந்தார்.
ராகுலின் இந்தக் கேள்விக்கு மத்திய அரசு பதிலளிக்காத நிலையில், மீண்டும் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், “மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் ஜெய்சங்கரின் மவுனம் வெறும் வார்த்தை மட்டுமல்ல, நம் அனைவருக்கும் அது வேதனை அளிக்கிறது. ஆகையால் மீண்டும் அவரிடம் கேட்கிறேன்.
பாகிஸ்தானுக்கு தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே தெரிந்திருந்த நிலையில், நாம் எத்தனை போர் விமானங்களை இழந்தோம் என்ற விவரத்தை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட வேண்டும். இது பாதுகாப்பு குறைபாடு அல்ல, குற்றம். ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் நமது தேச மக்கள் உண்மை நிலையை அறிய வேண்டும். இதுதொடர்பாக அவர் தனது மவுனத்தைக் கலைய வேண்டும்” என்றார்.