புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங்கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். இந்நிலையில், மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு மாநில காவல் துறை தலைவருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, விஜய் ஷா மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது..
இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் முன்ஜாமீன் கோரியும் விஜய் ஷா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறும்போது, “அமைச்சரின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு நாளில் ஒன்றும் நடந்துவிடாது. முன்ஜாமின் வழங்க முடியாது. உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்” என்றனர்.