புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான கபில் சிபல் மற்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரிடம் வரும் திங்கள்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (மே 20 ) ஒத்திவைத்த தலைமை நீதிபதி, அன்றைய தினம் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம் என்றார்.