பிரதமர் மோடி ஆலோசனை முதல் 5 ‘முக்கிய’ பயங்கரவாதிகள் பலி வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


சண்டிகரில் திரண்ட இளைஞர்கள்: இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். இது மக்களின் உணர்வுகளையும், இக்கட்டான நேரத்தில் நாட்டுக்கு சேவை செய்ய அவர்கள் தயாராக இருப்பதையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

5 ‘முக்கிய’ பயங்கரவாதிகள் பலி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்புகளின் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில், சில முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழந்தது, அவர்களுக்கான இறுதிச் சடங்களில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதில் இருந்து தெரிய வந்தது.

பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார். இந்நிலையில், இந்திய ஆயுதப் படைகள் எடுத்துள்ள பதில் நடவடிக்கைகள் தொடர்பாகவும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

‘இந்தியா தாக்குதலை நிறுத்தினால்....’ - பாக். வெளியுறவு அமைச்சர்: “இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம்.” என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ பாகிஸ்தான் துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் பேசினார். அப்போது “இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

கேரளாவில முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட (ஜுன் 1) நான்கு நாட்களுக்கு முன்னதாக மே 27-ம் தேதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மழைப் பொழிவில் 70 சதவீதம் பருவமழையால் மட்டுமே கிடைக்கிறது. பருவமழை என்பது இந்தியப் பொருளாதாரத்துக்கான உயிர்நாடியாகும்.

x