அமெரிக்க அறிவுரை முதல் சீன கவலை வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்

பாகிஸ்தானின் 3 விமான தளங்களை தாக்கிய இந்தியா: இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் வானூர்தி ஆணையம் இன்று மாலை 4 மணி வரை தாக்குதலுக்கு உள்ளான விமான தளங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா அறிவுரை: போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாரக இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பைத் தவிர்க்கவும்: பாதுகாப்பு படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதை அல்லது நிகழ்நேர செய்தியாக்குவதை அனைத்து ஊடக சேனல்கள், டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடக பயனர்கள் தவிர்க்க வேண்டும். முக்கியமான தகவல்களை முன்கூட்டியே நேரடியாக வெளியிடுவது ராணுவ படைகளின் செயல்பாட்டு திறனை சமரசம் செய்து பல உயிர்களுக்கு அது ஆபத்தை விளைவிக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இந்தியா - பாக். மோதலால் சீனா கவலை: இந்தியா - பாகிஸ்தான் மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது தங்களுக்கு கவலை அளிப்பதாக சீன வெளியறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்தச் சூழலில் இருந்து உரிய முறையில் சமுகத் தீர்வு காண வேண்டும்.” என சீனா வலியுறுத்தி உள்ளது.

ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் பாக். ஈடுபட்டதாக இந்தியா கண்டனம்: இன்று காலையும் ஆத்திரமூட்டும் தீவிர தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா அளவான முறையில் பதிலளித்தது. இந்திய மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் இந்திய அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மிகுந்த மகிழ்ச்சியடைவதையும் அவரது சில கருத்துக்களில் கண்டோம் என வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

x