எஸ்-400 கவச அமைப்புக்கு சேதம் ஏதும் இல்லை: பாதுகாப்புத் துறை


புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் எஸ்-400 பாதுகாப்பு கவச அமைப்புக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை அடுத்து இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் ட்ரோன் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. இதோடு அந்நாட்டின் சமூக வலைத்தளங்களில் சில போலி செய்திகளையும் பரப்பி வருகிறது. அதில் இந்திய ராணுவ தளவாடங்களை தாக்கியதாக கூறுகிறது.

அந்த வகையில் இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்பை அழித்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்நிலையில், அதை முற்றிலும் தவறான தகவல் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எஸ்-400 அழிக்கப்பட்டதாக அல்லது சேதப்படுத்தப்பட்டதாக வரும் தகவல் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. அது போலி செய்தி என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எஸ்-400: போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை ஒரே நேரத்தில் எஸ்-400 தாக்கி அழிக்கும். குறிப்பாக 30 கி.மீ.உயரத்தில் பறக்கும் ட்ரோன்களையும் நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.

இந்தியா - பாக். மோதல்: நடப்பது என்ன? - கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.

x