பாகிஸ்தான் தாக்குதலில் காஷ்மீரின் அரசு அதிகாரி உயிரிழப்பு - நடந்தது என்ன?


உயிரிழந்த அரசு அதிகாரி ராஜ் குமார் தாப்பா

ஸ்ரீநகர்: எல்லை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவும் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் மக்களின் வசிப்பிடங்களை பாகிஸ்தான் டார்கெட் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் மூத்த அதிகாரியான ராஜ் குமார் தாப்பா என்பவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக தன்னுடன் இணையவழியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ராஜ் குமார் பங்கேற்றதாக அவர் கூறியுள்ளார்.

“ரஜோரியில் இருந்து துயரச் செய்தி வந்துள்ளது. பணியில் அர்ப்பணிப்புடன் இருந்த பொறுப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்துள்ளோம். நேற்றைய தினம் மாவட்டம் முழுவதும் மாநிலத்தின் துணை முதல்வருடன் அவர் களத்தில் பணியில் இருந்தார். என்னோடு ஆன்லைன் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டார். இன்று (மே 10) ரஜோரி நகர் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அவரது வீடு தாக்கப்பட்டது. இதில் நமது கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ் குமார் தாப்பா உயிரிழந்தார். அவரது அகால மரணம் எனக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என முதல்வர் உமர் அப்துல்லா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

“மக்களுடன் நட்போடு பழகும் அதிகாரி. தேசத்துக்கும் சமூகத்துக்கும் மிகுந்த நேர்மையுடன் பணி செய்தார்” என ராஜ் குமார் தாப்பாவின் மறைவுக்கு பாஜகவின் ரவீந்தர் ரெய்னா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் தரப்பில் ட்ரோன், ஏவுகணைகளை கொண்டு எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மக்களின் வசிப்பிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது.

ஜம்முவுக்கு அருகே உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றும், கார்களும் பாகிஸ்தானின் தாக்குதலில் சேதமடைந்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதோடு இந்தியாவின் வடமேற்கு எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். மக்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

நேற்று மட்டும் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோட்டருகே இந்தியாவில் உள்ள சுமார் 26 இடங்களை பாகிஸ்தான் டார்கெட் செய்துள்ளது. இதை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்தியா - பாக். மோதல்: நடப்பது என்ன? - கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.

x